இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் (VRS) கீழ் ஓய்வு பெற விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு கட்டங்களாக நஷ்டஈடு வழங்க எதிர்பார்க்கப்படுவதாக துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் எழுப்பப்பட்ட வினா ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதற்கட்ட நடவடிக்கையாக மொத்த நஷ்டஈட்டுத் தொகையில் 50 சதவீதத்தை திறைசேரி நிதியிலிருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தற்போது ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் அதற்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
அதன்படி இந்த மாதம் 15ஆம் திகதியளவில் முதற்கட்ட 50 சதவீத நஷ்டஈட்டுத் தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எஞ்சிய 50 சதவீதத்தை குறுகிய காலத்திற்குள் வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.