கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில், நான்கு அருட்சகோதரிகள் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (22) அதிகாலை 3:30 மணியளவில் பறையநாளங்குளம் இரும்புப் பாலத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தின் போது வாகனத்தில் பயணித்த நான்கு அருட்சகோதரிகள் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஒரு அருட்சகோதரி பலத்த காயமடைந்துள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மன்னாரைச் சேர்ந்த ‘மாசற்ற அமலோற்பவ அன்னை’ சபையைச் சேர்ந்த அருட்சகோதரிகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.