Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இலங்கை ஒரு சோகமான சூழலில் மே தினத்தை நினைவுகூருகிறது- திலித் ஜயவீர!

இலங்கை ஒரு சோகமான சூழலில் மே தினத்தை நினைவுகூருகிறது- திலித் ஜயவீர!

இலங்கை ஒரு சோகமான சூழலில் மே தினத்தை நினைவுகூருகிறது என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

கொழும்பு ஹென்றி பெத்ரிஸ் மைதானத்தில் நடைபெற்ற சர்வஜன அதிகாரத்தின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் மிகப்பெரிய செல்வம் அதன் மனித வளமாகும். ஒரு தொழில்முனைவோர் அரசு உழைக்கும் மக்களாலேயே கட்டியெழுப்பப்படுகிறது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இம்முறை மே தினத்தை ஒரு சோகமான பின்னணியிலேயே கொண்டாட வேண்டியுள்ளது. உழைக்கும் மக்களுக்கு எதிராக இவ்வளவு தூரம் அரச அதிகாரத்தைப் பயன்படுத்திய வேறு எந்த அரசாங்கமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ஒரு சோகமான சூழலில் மே தினத்தை நினைவுகூருகிறது. நிதியமைச்சை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மில்லியன் கணக்கான டொலர்கள் ஹெக்கர்களால் திருடப்பட்டதாகக் கூறப்படும் பின்னணியில், அதன் உண்மையை வெளிப்படுத்திய அரச அதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் உழைக்கும் மக்களைத் துரத்தித் துரத்தித் தாக்கி வருகிறது என அவர் குற்றம் சாட்டினார்.

மின்சார சபை ஊழியர்களை அச்சுறுத்திய விதம் குறித்துப் பேசிய அவர், லெனின், மார்க்ஸ் அல்லது விஜேவீரவின் புகைப்படங்களைப் பயன்படுத்திப் பேரணிகளை நடத்த இவர்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பினார்.

உண்மையான இடதுசாரி இயக்கம் என்பது மக்களின் இதயத் துடிப்பு என்றும், அந்தத் தூய்மையான அரசியலை இவர்கள் அழித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அநுர குமாரவின் நாடக அரசியலுக்கு இனி எதிர்காலம் இல்லை. 60,000 இளைஞர்களைப் பலிகொடுத்த கட்சி இது.

அந்த இளைஞர்களுக்கு இவர்கள் பதிலளிக்க வேண்டும். இது அநுர குமாரவின் அரசாங்கம் அல்ல, அநுரவும் ரணிலும் இணைந்து உருவாக்கிய அரசாங்கமே நாட்டை நடத்துகிறது.

இந்தப் புத்தகம் ரணில் விக்கிரமசிங்கவின் உள்ளடக்கத்தைக் கொண்டது, அட்டை மாத்திரமே அநுரவுடையது என அவர் விமர்சித்தார்.

ஒரு வளர்ந்த இலங்கையை உருவாக்கவும், வெளிநாடுகளுக்குச் செல்ல நினைக்கும் இளைஞர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கவும் தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

சர்வஜன அதிகாரம் நிச்சயமாக அதிகாரத்தைக் கைப்பற்றும். தாய்நாட்டின் மீது அன்பு கொண்ட மக்களை நிபந்தனையின்றி ஒன்றிணைப்போம்.

இந்த அரசாங்கத்தையும் அதற்கு முட்டுக்கொடுக்கும் சக்திகளையும் தோற்கடிப்போம் என திலித் ஜயவீர மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter