Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இலங்கை – சீனா இணைந்து இணைய வழி சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடிகள் ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை!

இலங்கை – சீனா இணைந்து இணைய வழி சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடிகள் ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை!

இணைய வழி சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் அவை சார்ந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுக்கள் பிற நாடுகளில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதைத் தடுப்பதற்காக, சீனாவிற்கும் இலங்கையிற்கும் இடையிலான கூட்டுச் சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பிலுள்ள சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார, நிதி மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், இரு நாடுகளினதும் சட்ட அமுலாக்க முகவர் நிறுவனங்களுக்கு இடையிலான நடைமுறை ரீதியான ஒத்துழைப்பும் வளர்ச்சியடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மற்றும் விசாரணைகளின் போது, பல சட்டவிரோத சூதாட்ட மற்றும் மோசடி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு, பெருமளவிலான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சந்தேகநபர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சில சீன பிரஜைகள் சீன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

எல்லை தாண்டிய சூதாட்ட நடவடிக்கைகள் குறித்து சீன அரசாங்கத்தின் நிலைப்பாடு கடுமையானது எனவும், சீனப் பிரஜைகள் வெளிநாட்டு சூதாட்ட விடுதிகளை இயக்குவது அல்லது அவற்றில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இத்தகைய நடவடிக்கைகள் பணமோசடி, கடத்தல்கள், மனித கடத்தல் மற்றும் சட்டவிரோத எல்லைத் தாண்டல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவும் இலங்கையும் இணைந்து இந்த குற்றவியல் வலையமைப்புகளை அடக்குவது, சந்தேகநபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது மற்றும் அவர்களின் நிதி மற்றும் நிறுவன கட்டமைப்புகளை உடைப்பதன் மூலம், இரு நாட்டு மக்களின் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்றும் சீன தூதரகம் மேலும் வலியுறுத்தியுள்ளது​.

பகிர்க: Facebook Twitter