நீர் கட்டண திருத்தம் குறித்து ஜூன் 30ஆம் திகதி மீளாய்வின் போது நிலைமை ஆராயப்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிரந்தர சேவையில் இணைந்துகொள்ளும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முதல் 6 மாதங்களுக்கு நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என்ற தீர்மானத்தை நாங்கள் எடுத்துள்ளோம். அடுத்த மீளாய்வு ஜூன் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஜனவரி மாதம் முதல் ஜூன் 30 வரை நீர் சுத்திகரிப்பு மற்றும் நீர் வழங்கல் சபையின் பணிகளுக்காகச் செலவிடப்பட்ட தொகையை எமது முறையின்படி ஆராய்வோம்.
அண்மையில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டமை நீர் கட்டணத்தில் ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது மிகக் குறைந்த தாக்கமே.
ஜூன் 30 ஆம் திகதி மீளாய்வின் போது நிலைமையை ஆராய்வோம். நீர் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நான் நம்புகிறேன்- என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.