Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பழைய அழிவுக்குரிய அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும்- சரத் பொன்சேகா!

பழைய அழிவுக்குரிய அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும்- சரத் பொன்சேகா!

தற்போதைய அரசு ஒருவேளை கவிழ்க்கப்பட்டால், மீண்டும் பழைய ஊழல்மிக்க அரசியல் சக்திகளே ஆட்சிப் பீடமேறுவர் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து நேற்று (28) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசு ஒருவேளை கவிழ்க்கப்பட்டால், மீண்டும் பழைய ஊழல்மிக்க அரசியல் சக்திகளே – சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சித் தரப்போ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்போ – ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து ஆட்சிப் பீடமேறினால் நாடு மீண்டும் பழைய அழிவுப் பாதைக்கே செல்லும். அது நாட்டை மீண்டும் ஒரு பாரிய பொருளாதார வீழ்ச்சிக்குள் தள்ளிவிடும்.

கடந்த 15 ஆண்டுகள் நான் இந்த அரசியல் கட்சிகளுடன் இணைந்து பயணித்தவன். அந்த அனுபவத்தின் மூலம் அவர்களின் உண்மை நிலை, திறமையின்மை மற்றும் நேர்மையின்மை குறித்துத் தெளிவாகப் புரிந்துகொண்டேன். அந்தப் புரிதலின் அடிப்படையிலேயே நான் அந்தக் கட்சிகளில் இருந்து விலகியதுடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே மக்களுக்கு இந்த உண்மைகளை எடுத்துரைத்தேன். அதன் விளைவாகவே மக்கள் பழைய அரசியல் சக்திகளை முற்றாக நிராகரித்து, புதிய அரசியல் பயணத்திற்காகத் தற்போதைய தரப்புக்கு ஆணையை வழங்கியுள்ளனர்.

தற்போதைய அரசில் சில குறைபாடுகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. மக்கள் எதிர்பார்த்த அனைத்தும் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை என்பதையும் நான் ஒப்புக்கொள்கின்றேன். எனினும் முந்தைய அரசுகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய ஆட்சியாளர்களிடம் ஊழலுக்கு எதிரான நேர்மையான நோக்கமும், அரச வளங்களைப் பாதுகாக்கும் எண்ணமும் காணப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற காலத்தில், ஊழலுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு இருந்தது. ராஜபக்ஷ அரசில் இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராக அவர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் நாட்டின் நிலைமை வேறாக இருந்திருக்கும். ஆனால், அந்தப் பொன்னான வாய்ப்பை அவர் பயன்படுத்தத் தவறியதாலேயே மக்கள் அவரைத் தேர்தலில் நிராகரித்தார்கள்.

தற்போதைய அரசு தனது ஐந்தாண்டு காலப் பகுதியில் நாட்டுக்கு முழுமையான வெற்றியைப் பெற்றுத்தரத் தவறினால், அதற்குப் பிறகு ஊழலற்ற மற்றும் நாட்டை நேசிக்கும் ஒரு புதிய தலைமைத்துவம் உருவாக வேண்டும். ஆனால், எந்தவொரு சூழ்நிலையிலும் பழைய அரசியல் குழுக்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. அவ்வாறு நடந்தால் நாடு மீள முடியாத வீழ்ச்சியைச் சந்திக்கும். எனவே, அந்தப் பழைய அழிவுக்குரிய அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதே தற்போதைய காலத்தின் மிக முக்கியமான முன்னுரிமையாகும்- என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter