அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ட்ராக்டர் சந்திக்கு அருகில், டிப்பர் வாகனமொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
தடயந்தலாவ மற்றும் நவகம்புர பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது.
புத்தங்கல பகுதியிலிருந்து ஹோல்மன்கல நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், பாலிகா சுற்றுவட்டம் பகுதியிலிருந்து அம்பாறை பொது வைத்தியசாலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பின்னால் பயணித்த மேலும் மூவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியில் யாலேகம சந்திக்கு அருகில், காலி நோக்கிப் பயணித்த அடையாளம் தெரியாத வாகனமொன்று பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பிச் சென்றுள்ள நிலையில், சந்தேகநபரான சாரதியைக் கைது செய்ய கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.