அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எழுந்துள்ள போர் பதற்றத்திற்கு மத்தியில், இலங்கை கடல் எல்லைக்கு அருகில் சர்வதேச கடல் எல்லையில் 47 கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் கடல் எல்லையிலிருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் இந்தக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
இந்தக் கப்பல்களில் ஈரானியக் கப்பல்களும் ஏனைய நாடுகளின் கப்பல்களும் அடங்குவதாகவும், அவை வணிக மற்றும் சரக்குக் கப்பல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தக் கப்பல்கள் எதுவும் இதுவரை இலங்கையிடம் எந்தவித வசதிகளையும் கோரவில்லை என்றும், இலங்கையும் அவற்றுக்கு எந்த வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் கடற்படையினர் இது குறித்து அவதானித்து வருவதாகவும், அரசாங்கம் இதில் எந்தவித தலையீடும் செய்யவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.