தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எதிராக நேற்று (24) வெளியிட்ட கூற்று பொய்யானது மற்றும் அடிப்படையற்றது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாராளுமன்ற வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி மக்களைத் தவறாக வழிநடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இதுவென வலியுறுத்தியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை, அடிப்படையற்றவை மற்றும் தீய நோக்கத்தில் முன்வைக்கப்படவை எனச் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கிறது.
தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் தாக்குதல்கள் வெற்றியளிக்காது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டச் சமூகம் ஒற்றுமையாக இருப்பதுடன், அதன் சுயாதீனத்திற்கும் நற்பெயருக்கும் விடுக்கப்படும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வரப்பிரசாதங்களுக்குப் பின்னால் மறைந்துகொண்டு வெளியிட்ட இந்த பொய்க் கூற்றை, இயலுமானால் பாராளுமன்றத்திற்கு வெளியே மீண்டும் கூறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷனவிற்குச் சவாலும் விடுத்துள்ளது.