காதலை மறுத்தமையால் இளம் யுவதி ஒருவர், அயல் வீட்டு இளைஞனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மெதிரிகிரியைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
மெதிரிகிரியைப் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் தனியார் வங்கியொன்றில் ஊழியராகக் கடமையாற்றி வந்துள்ளார்.
அந்த பெண்ணின் அயல் வீட்டில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் நீண்டகாலமாக அவரை காதலித்து வந்துள்ளார். எனினும் இளைஞரின் காதலை அந்த யுவதி தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளார்.
இதனால் கடும் மனவிரக்தியடைந்திருந்த அந்த இளைஞர், நேற்று மாலை யுவதி மீது கூரிய ஆயுதத்தால் வெட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு படுகொலை செய்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான 28 வயதுடைய இளைஞர் அந்தப் பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளார்.
குறித்த இளைஞனை கைது செய்யப் பொலிஸார் தீவிரமான தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.