Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவம்- விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள்!

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவம்- விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள்!

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் அந்த பிள்ளைகளின் தந்தை எனக்கூறப்படும் நபரை நேற்று (28) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வௌியாகியுள்ளன.

கைதான சந்தேகநபர் உயிரிழந்த இரு குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய் எனக் கூறி, போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் புற்றுநோய்க்காக அனுமதிக்கப்பட்டுள்ள தாயை பார்வையிடுவதற்காக தமது தந்தையுடன் அவரது இரண்டு பிள்ளைகள் பதுளையில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு சென்றிருந்தனர்.

இதன்போது அவர்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, விடுதிக்குள் ஏற்பட்ட தீப்பரவலில் 3 வயதுடைய ஆண் பிள்ளையொன்றும், 5 வயதுடைய பெண் பிள்ளையொன்றும் கடந்த புதன்கிழமை மூச்சுத் திணறலால் உயிரிழந்தனர். ​

இந்த நிலையில் குறித்த தந்தையின் அடையாள அட்டையை பரீசீலித்த போது, அது வேறு ஒருவருடையது என கண்டறியப்பட்டுள்ளது.

அந்த அடையாள அட்டைக்கு சொந்தமானவர் பதுளையைச் சேர்ந்தவர் என்றும் அவரது அடையாள அட்டை கடந்த 2023 ஆண்டு காணாமல் போன நிலையில், சட்டரீதியாக புதிய அடையாள அட்டை பெற்று தற்போது கடவத்தையில் அவர் வசித்து வருகின்றார் எனவும் தெரியவந்துள்ளது.

அவரது அடையாள அட்டையை தம்முடையது எனக்கூறி, கைதான அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேகநபர் குறித்த குற்றச்செயலுக்காக பயன்படுத்தியுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனைவி புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவருவதாக கூறிய விடயமும் போலியானது என்பதுடன் அவரது மனைவி மாத்தறையில் உள்ள வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சந்தேகநபர் தமது மனைவிக்கு புற்றுநோய் எனக்கூறி பல இடங்களில் யாசகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கைதான சந்தேகநபருக்கு எதிராக அத்துருகிரிய, சப்புகஸ்கந்த, அநுராதபுரம், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் காணப்படுவதாகவும், அவருக்கு எதிராக பிடியாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே இந்த சந்தேகநபரை நேற்று (28) இரவு பொலிஸார் கைது செய்ததுடன், அவரது தாயாரையும் விசாரணைக்கு அழைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்க: Facebook Twitter