Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இலங்கையில் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி வருவாய் உயர்வு!

இலங்கையில் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி வருவாய் உயர்வு!

இலங்கையின் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி வருவாய், 2026ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்வடைந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் தேங்காய் துறையின் ஏற்றுமதி வருவாய் 21.38 சதவீதத்தால் அதிகரித்து, 406.28 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

உலக சந்தையில் இலங்கைத் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளுக்குக் காணப்படும் அதிகரித்த தேவையும், பாரம்பரியமாக முழுத் தேங்காய்களை ஏற்றுமதி செய்வதிலிருந்து விலகி, அதிக மதிப்பு கூட்டப்பட்ட (Value-added) தயாரிப்புகளுக்கு துறை மாறியுள்ளதுமே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இந்த ஆண்டில் தேங்காய் கைத்தொழில்துறையின் பல முக்கிய பிரிவுகளும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

அதன்படி, தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி 26.09 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

உலர்ந்த தேங்காய் (Desiccated Coconut) ஏற்றுமதி 38.8 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது.

தேங்காய் கிரீம் ஏற்றுமதி 24.48 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

தேங்காய் சிரட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் சர்வதேச சந்தையில் காணப்படும் அதிக தேவையால் 49.38 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளன.

இயற்கை அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆரோக்கிய உணவுப் பொருட்கள் தொடர்பான உலகளாவிய சந்தையில் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளுக்கான கேள்வி அதிகரித்து வருவது இலங்கைக்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த உலகளாவிய தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், உள்நாட்டு தேங்காய் உற்பத்தியை 4.2 பில்லியன் வரை உயர்த்தும் இலக்குடன் அரசாங்கம் உர மானியங்கள் மற்றும் மறுசெய்கைத் திட்டங்களுக்காக 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter