இளவாலை, மாதகல் பகுதியில் டிக்-டொக் (TikTok) காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 15 வயதுச் சிறுமியைப் பொலிஸார் மீட்டு விசாரணை நடத்தியபோது, அவர் ஏற்கனவே மற்றொரு நபரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
டிக்-டொக் செயலி மூலம் அறிமுகமான, நெல்லியடி பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவருடன் குறித்த 15 வயதுச் சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இது குறித்துப் பெற்றோர் அளித்த புகாரையடுத்து, நெல்லியடி பொலிஸாரின் உதவியுடன் அந்த ஜோடியை இளவாலை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் நடத்திய விசாரணையில்,
“சிறுமியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றது உண்மைதான்; ஆனால் அவருடன் தவறாக நடக்கவில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சட்ட நடைமுறைகளின்படி சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்துச் சிறுமியிடம் பொலிஸார் நடாத்திய தீவிர விசாரணையின் போது, தற்போதைய காதலனுடன் செல்வதற்கு முன்பாக, தனது பகுதியைச் சேர்ந்த 21 வயதான முன்னாள் காதலன் ஒருவனால் தான் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதாக அச்சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிறுமியின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, அவரது முன்னாள் காதலனையும் பொலிஸார் உடனடியாகக் கைது செய்தனர்.
தற்போது 21 வயதுடைய முன்னாள் மற்றும் தற்போதைய காதலர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.