
‘குஷ்’ போதைப்பொருளுடன் இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் கொழும்பைச் சேர்ந்த 33 வயதுடைய ஒரு புகைப்பட கலைஞர் (Photographer) எனத் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர், பேங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தின் பசுமை வழி (Green Channel) ஊடாக அவர் வெளியேற முயன்றபோது, விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அவரது பயணப் பொதியில் மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ‘குஷ்’ போதைப்பொருள் தொகுதி கண்டெடுக்கப்பட்டது.
உலர்ந்த பழப் பொதிகளுக்குள் இருந்த பழங்களை அகற்றிவிட்டு, அதற்குள் மிக சூட்சுமமான முறையில் இந்த போதைப்பொருள் பொதி செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதி என்பன விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.