மன்னார் மாவட்டத்தில் அனைத்து மணல் அகழ்வு உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்தல், மணல் அகழ்வு உரிமங்களை வழங்குதல் மற்றும் மணல் விலையைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக, அதிகாரிகள் மற்றும் மணல் வர்த்தகர்களுக்கு இடையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (10) நடைபெற்ற விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்பட்டது.
மணல் அகழ்வு உரிமங்களை வழங்குவது புதிய விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்கப்படும் என இது குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“மணல் உரிமையாளர்களின் தரப்பிலிருந்து அவர்களின் பிரச்சினைகள், கருத்துக்கள் மற்றும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. மணல் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக, வறிய குடும்பங்கள் வீடுகளை அமைப்பதற்கு 3 கியூப் மணலை 50,000 ரூபாவிற்கும், அரசாங்க கட்டுமானப் பணிகளுக்கு 3 கியூப் மணலை 65,000 ரூபாவிற்கும் வழங்குமாறும், ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 350 ரூபா வீதம் கட்டண அதிகரிப்பை வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல் உரிமங்களை வழங்கும் போது இதற்கான சட்ட ரீதியான விடயங்கள் சில புதிதாக வரைபு செய்யப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட செயலாளரின் இறுதி முடிவு மற்றும் மேற்பார்வையின் கீழ் உரிமங்களை வழங்குவதற்கான புதிய விதிமுறைகள் தயாரிக்கப்படுவதாக அமைச்சரும் புவியியல் திணைக்கள பணிப்பாளரும் தெரிவித்தனர்.
இதன் மூலம் உரிமங்களை வழங்கும் நடைமுறையில் ஒரு முறைமை உருவாகும் என நாம் கருதுகிறோம்” என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.