அம்பாறை மாவட்டம், கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக கஞ்சா செடியை பயிரிட்டிருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
56 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகளால் நேற்று (19) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரிடம் பொலிஸார் விசாரணை நடாத்திய வேளையில், குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது.
கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதான நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.