2026ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து விதமான மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பட்டறைகளை நடத்துவதற்கு இன்று (05) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தத் தடையானது புலமைப்பரிசில் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அமுலில் இருக்கும்.
இந்த காலப்பகுதியில் பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் அல்லது பரப்புரை செய்தல் என்பனவும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெறும் வினாக்களை வழங்குவதாகவோ அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகவோ குறிப்பிட்டு சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிடுதல், அச்சிடப்பட்ட மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக விளம்பரம் செய்தல் அல்லது அத்தகைய பொருட்களை வைத்திருப்பதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 09ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளது.
இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
நிலவும் மழைக்கால வானிலைக்கு மத்தியில் பரீட்சை நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.