இலங்கையில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், மோட்டார் சைக்கிள்களுக்கென ஒதுக்கப்பட்ட முதலாவது பிரத்யேக வீதித் திட்டத்தை, களுவாஞ்சிகுடியில் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, “100 க்கு 100” தேசிய கூட்டாண்மை மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு, உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார்.
இந்தப் புதிய வீதியானது ரப்பர் தடுப்புகளை பயன்படுத்தி ஏனைய வாகனப் போக்குவரத்துகளில் இருந்து பிரிக்கப்படும்.
மலேசியா போன்ற நாடுகளில் இத்தகைய பிரத்யேக வீதிகள் விபத்துகளைக் குறைக்க உதவியுள்ளதை முன்மாதிரியாகக் கொண்டு, இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான வடிவமைப்புகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் மாதங்களில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
களுவாஞ்சிகுடிபகுதியில் மோட்டார் சைக்கிள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலேயே களுவாஞ்சிகுடி இந்த முன்னோடித் திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.