Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
உலக செய்திகள்

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம்!

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம்!

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல், ஈரானிய ஷியா முஸ்லிம்களின் மிக புனிதமான தலங்களில் ஒன்றான மஷ்ஹத் (Mashhad) நகரில் அமைந்துள்ள இமாம் ரெஸா (Imam Reza) தர்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் அதன் அண்டை நாடான ஈராக்கின் பல நகரங்களில் ஆறு நாட்களாக நடைபெற்ற பொதுமக்களின் அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் இறுதி மத வழிபாடுகளைத் தொடர்ந்து இந்த உடல் அடக்கம் நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையானது, கமேனியின் மரணத்திற்கு வழிவகுத்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக எட்டப்பட்டிருந்த முதற்கட்ட உடன்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இதேவேளை இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில், தெஹ்ரானையும் மஷ்ஹத் நகரையும் இணைக்கும் ரயில் பாதையின் இரண்டு பாலங்கள் மீது அமெரிக்கா ஒரே இரவில் குண்டுவீச்சு நடத்தியுள்ளதாக ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தெஹ்ரானில் உள்ள அயதுல்லா அலி கமேனியின் இல்லத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவரும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அவருக்குப் பிறகு அவரது மகன் மொஜ்தாபா கமேனி (Mojtaba Khamenei) புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படும் செய்திகளுக்குப் பின்னர், அவர் இதுவரை பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

மேலும் தெஹ்ரான் மற்றும் கோம் (Qom) நகரங்களில் நடைபெற்ற இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் மொஜ்தாபா கமேனி கலந்துகொள்ளவில்லை என்பதுடன், மஷ்ஹத் நகரில் நடைபெற்ற உடல் அடக்க நிகழ்வில் அவர் கலந்துகொண்டாரா என்பது குறித்தும் எவ்வித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்களும் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இன்று காலை ஈராக்கிலிருந்து மஷ்ஹத் நகருக்கு வந்த விசேட விமானம் மூலம் அலி கமேனி, அவரது பேத்தி, மருமகன், மகள் மற்றும் மொஜ்தாபாவின் மனைவி ஆகியோரின் உடல்கள் மஷ்ஹத் நகருக்குக் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter