பஸ் கட்டணத் திருத்தத்தை ஜூலை 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தக் கோரி, தனியார் பஸ் சங்கங்கள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பில் நேற்றையதினம் எழுத்துப்பூர்வமாக கையளித்ததாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்து தெரிவிக்கையில்,
ஆண்டுதோறும் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தம் 5ஆம் திகதி செயல்படுத்தப்படும் என நாங்கள் முன்னதாக அறிவித்திருந்தோம்.
இந்த மாத இறுதியில் வரவிருக்கும் எரிபொருள் விலை மாற்றத்தை பரிசீலித்த பிறகு, எங்களின் அனைத்து சங்கங்களுடனும் கலந்துரையாடி, அவர்களின் ஒப்புதலைப் பெற்று, பஸ் கட்டணத்தை வழக்கம் போல் ஜூலை 1ஆம் திகதி திருத்தியமைக்க நேற்று எழுத்துப்பூர்வ அறிவிப்பை வெளியிட முடிவு செய்தோம்.
மேலும் தேசிய போக்குவரத்து ஆணைக்குவுடனும் இந்த 5 நாட்களுக்குள் கலந்துரையாட முயற்சி செய்து வருகிறோம். நாங்கள் எங்கள் அனைத்து விலைகளையும் தெரிவித்துவிட்டோம். இருப்பினும் ஜூலை மாதத்தில் செய்யப்படும் திருத்தம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்- என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.