களுத்துறை விசேட குற்றவியல் விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களைப் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் விசேட குற்றவியல் விசாரணை பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறைப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வாகனம் தொடர்பாக விசேட குற்றவியல் விசாரணை பிரிவினர் விசாரணையொன்றை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அந்த விசாரணைக்கு அமைவாக, நீதிமன்றத்தில் குற்றவியல் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக அவர் 10 இலட்சம் ரூபாய் பணத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகர், முறையீட்டாளரிடமிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், எஞ்சிய 9 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக களுத்துறையிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வந்திருந்த போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.