2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு குறித்து தெளிவுபடுத்துவதற்காக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்ற பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 11,790 ஆகும்.
அதேபோன்று கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் சித்தியடைந்தவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி இம்முறை விஞ்ஞானப் பாடத்தில் 70.1% மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், கடந்த வருடம் அது 69.07% ஆகக் காணப்பட்டது.
இம்முறை கணிதப் பாடத்தில் 72.03% மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், கடந்த வருடம் அது 71.06% ஆகக் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 7,419 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாமை தெரியவந்துள்ளது.
இதேவேளை 2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இவ்வருடத்தின் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணிகள் ஜூலை மாதத்தின் முதலாவது வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.