கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகத் தொகுதி விநியோக மையங்களுக்கு உரிய முறையில் ஒப்படைக்கப்படவில்லை என கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உயர் பெண் அதிகாரி ஒருவரால் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இசுருபாய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட முதலாம் தரத்திற்கான 19,892 தமிழ் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் உரிய முறையில் விநியோக மையங்களுக்கு கையளிக்கப்படாத சம்பவம் தொடர்பில் கடந்த 12ஆம் திகதி தலங்கம பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
குறித்த புத்தகத் தொகுதியைக் கொண்டு செல்வதற்காக, கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனத்திற்கு எடுத்துச் செல்ல கடந்த மே மாதம் 4ஆம் திகதி அனுமதி பெறப்பட்டிருந்த போதிலும், அப்புத்தகங்கள் விநியோகிக்கப்படவிருந்த கிழக்கு மாகாணத்திலுள்ள 12 மையங்களுக்கு அவை உரிய முறையில் விநியோகிக்கப்படவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உரிய முறையில் விநியோகிக்கப்படாத புத்தகங்கள் முதலாம் தரத்தின் மூன்றாம் தவணைக்குரிய புத்தகத் தொகுதியாகும் என்பதுடன், இதன் பெறுமதி சுமார் 8 இலட்சம் ரூபாயாகும்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.