தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த 9 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
குறித்த மீன்பிடிப் படகு சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, கடல் அடிவாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ‘அடிமடி வலை’ (Bottom Trawling) முறையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட 9 மீனவர்களும் மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடிப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
மேலும் மன்னார் தீவு மற்றும் ஆதாம் பாலத்தை சுற்றியுள்ள மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் தொகுதி சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மண்டலமாகக் கருதப்படுகிறது.
எனவே இந்தப் பகுதி சிறப்பு மீன்பிடி முகாமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக பேணப்பட்டு வருகின்றது.