மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட, ‘ரத்மலானே சைமா’ என அழைக்கப்படும் நபர் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குற்றக்குழுவைச் சேர்ந்த கஞ்ச்பானி இம்ரானின் நெருங்கிய சகா எனக் கூறப்படும் இந்நபர், ஓகஸ்ட் 10ஆம் திகதி இரவு பேராதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த இவரை, வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மலேசிய பொலிஸார் மற்றும் இன்டர்போல் அமைப்பின் உதவியுடன் அண்மையில் கைது செய்தனர்.
குறித்த நபருடன் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் மூவரும் இலங்கை கொண்டுவரப்பட்டனர்.
41 வயதான முதன்மைச் சந்தேகநபர் மீது, 2014ஆம் ஆண்டு பேராதனை பொலிஸ் பிரிவில் துப்பாக்கிகளைக் காட்டி நபரொருவரைக் கடத்திச் சென்று காயப்படுத்தியமை மற்றும் 2016ஆம் ஆண்டு ஒருவரைச் சுட்டுக் கொன்றமை தொடர்பில் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனிடையே, கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட மற்ற இரு சந்தேகநபர்களும் ஓகஸ்ட் 11 அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.