மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகள் இன்று (03) மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹர சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து 104 கைதிகள் தும்பர, வெலிகடை, பூசா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையினால் கைதி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவத்தின் போது கைதிகளினால் சிறைச்சாலையின் கட்டடங்கள் மற்றும் பெருமளவிலான சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மோதல் தொடர்பில் தற்போது பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் மஹர சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் காரணமாக இன்று முதல் 03 நாட்களுக்குக் கைதிகளைப் பார்வையிடுவதை நிறுத்தச் சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.