யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் (31) ஊடகவியலாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன யாழுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
முன்னதாக யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருந்த நிலையிலையே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, ஊடக பிரதி அமைச்சரின் நிகழ்வினை யாழ். ஊடக அமையத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் புறக்கணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.