தற்போதைய சமூகத்தில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மக்கள் அடிமையாகியுள்ளதன் காரணமாக குடும்பக் கட்டமைப்பு மற்றும் மனித உறவுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சீதுவை பகுதியில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
திறந்த சந்தைப் பொருளாதாரம் இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதோடு சமூகத்திற்குள் நுகர்வுவாதம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் மூலம் மக்கள் மத்தியில் செயற்கையான ஆசைகளை உருவாக்கி பணம் சம்பாதிப்பதுவே இன்று சமூகத்தை இயக்கும் பிரதான காரணியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் திறந்த சந்தைப் பொருளாதாரமானது மக்கள் மத்தியில் இதற்கு முன்னர் இல்லாத எல்லையற்ற ஆசைகளையும் தேவைகளையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், சந்தையானது மக்களின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் அன்றி, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆசைகள் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே கட்டுப்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.