உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் தற்போது நிலவும் நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமை அரசியலமைப்பை மீறும் செயலாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயர்நீதிமன்றத்தில் 8 வெற்றிடங்கள் உள்ளன. அவை நிரப்பப்படவில்லை. அது எமது அரசியலமைப்பை மீறும் செயலாகும்.
அரசியலமைப்பின் படி ஜனாதிபதி பெயரை அனுப்ப வேண்டும். எனவே பல மாதங்களாக நியமிக்கவில்லை என்பது அரசியலமைப்பில் உள்ள சரத்துக்கள் மற்றும் பாரம்பரியத்தை மீறுவதாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திடமும், ஜனாதிபதியிடமும் இதைப் பற்றி மீண்டும் சிந்தித்துப் பார்க்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறானதொரு திருத்தத்திற்கான தேவை காணப்படுமாயின் அது குறித்து முதலில் பகிரங்கமாக விவாதிக்க வேண்டும் என்றும், குறித்த யோசனையை நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு உண்மையான தேவை இருக்குமாயின் அதற்கு முன்னர் நேரடியாகவே சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்று மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்திருந்தார்.
இதேவேளை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (27) பிற்பகல் கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
அதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.