கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பார்க் வீதிப் பகுதியில் 02 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் இரு சந்தேகநபர்களைக் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பு 13 மற்றும் கொழும்பு 14 பகுதிகளைச் சேர்ந்த 54 மற்றும் 59 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (21) மாலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த நபர்கள் 2 கோடியே 70 இலட்சம் ரூபாய் பணத்தைக் காரொன்றில் எடுத்துச் சென்ற வேளையில், கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அப்பணம் சம்பாதித்த விதத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.
கைதான நபர்கள் தற்போது கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.