ஆனமடுவ நகருக்கு அருகிலுள்ள பரமாகந்த சந்தியருகே அரச பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த கோப்ரல் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது ஆனமடுவ, ஊரியாவ பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய துமிந்த சந்தருவன் விக்ரமஆரச்சி என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த நபர் இன்று காலை தனது இரு மகள்களையும் மோட்டார் சைக்கிளில் ஆனமடுவ கன்னங்கர மகா வித்தியாலயத்தில் விட்டுவிட்டு வீடு திரும்பும் போதே இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார்.
புத்தளத்தில் இருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த புத்தளம் இ.போ.ச டிப்போவுக்கு சொந்தமான பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த கோப்ரல் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின் பின்னர் பேருந்து சுமார் 100 மீற்றர் தூரம் முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு நின்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், குறித்த கோப்ரல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை பிரதேசத்தில் நடைபெற்ற நீண்ட இராணுவ பயிற்சியின் பின்னர் நேற்று (19) வீடு திரும்பிய அவர், இன்று மீண்டும் பணிக்கு செல்லவிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த கோப்ரலின் ஒரு மகள் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இ.போ.ச பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.