Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு விசேட வேலைத்திட்டம்!

விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு விசேட வேலைத்திட்டம்!

விசேட தேவையுடைய பிள்ளைகள், ஆட்டிசம் (Autism) மற்றும் ஏனைய நரம்பியல் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகள், சாதாரண முன்பள்ளிப் பிள்ளைகளுடன் இணைந்து கற்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்க்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

விசேட தேவையுடைய பிள்ளைகளைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி, அவர்களுக்குத் தனித்தனியாகக் கற்பிக்கும் பழைய முறையைக் கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்காக சமூக சேவைத் திணைக்களத்துடன் இணைந்து புதிய கூட்டு வேலைத்திட்டமொன்று ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளுடன் கூடிய செயற்பாடு சார்ந்த கல்வி முறையும், நடத்தை ரீதியான பழக்கப்படுத்துதல்களும் அத்தியாவசியமானவை எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அப்பிள்ளைகளைத் தனிமைப்படுத்தாமல் சாதாரண பிள்ளைகளுக்கு மத்தியிலேயே அவர்கள் வளர்வதற்குக் தகுந்த வாய்ப்பளிப்பது மிகவும் முக்கியமானது எனச் சுட்டிக்காட்டினார்.

இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கான முதற்படியாக, விசேட தேவையுடைய பிள்ளைகளைக் கையாளும் விதம் குறித்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வூட்டும் மற்றும் பயிற்சி அளிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தனியார் துறையின் பங்களிப்புடன் இயங்கும் பல முன்னணி விசேட நிறுவனங்களும் இதற்குப் பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

இலங்கையின் தேசியக் கல்வி முறைமைக்குள் ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வியைப் பெறும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான வாய்ப்புகள் தற்போது குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய எதிர்காலத்தில் அப்பிள்ளைகளின் தேவைகளைச் சிறந்த முறையில் பூர்த்தி செய்யக்கூடிய முன்பள்ளி முறைமையொன்றை நாட்டில் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter