2026ஆம் ஆண்டு 01ஆம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய சுற்றறிக்கையினால், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிள்ளைகளுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகவும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அரசாங்கத்துடன் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், இதுவரை தீர்வுகள் வழங்கப்படாத காரணத்தினால், வரவிருக்கும் உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடுவது குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டி ஏற்படும் என்று அந்தச் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பிரகீத் வீரதுங்க தெரிவித்தார்.
இதற்கமைய கடந்த நாட்களில் நடைபெற்ற அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் பிரதான கூட்டத்தில், தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் பொதுக் கல்விச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய அனைத்து தன்னார்வப் பணிகளிலிருந்தும் விலகுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தொடர்பாகவும் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.