ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டை தயாரித்து மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நேற்று (26) பிற்பகல் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கண்டியை வசிப்பிடமாகக் கொண்ட 41 வயதுடைய ஜனாதிபதி செயலகம், நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவைப் பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இதற்கு முன்னர் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகப் பிரிவின் பிரதிக் கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிய போதே இந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.