யாழ்.சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோரை உப தவிசாளர் பதவியில் இருந்து நீக்கி, நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும், வாடா மாகாண ஆளுநர் வேதநாயகனால் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசிய குற்றத்துக்காக அவரது பதவியை நீக்கி வடக்கு மாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
குறித்த சம்பவத்தை கண்டித்தும், நீதி கோரியும், இன்றையதினம் சாவகச்சேரி வர்த்தகர்கள் முழு நாள் கடையடைப்பு செய்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன்,சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

