வவுனியா மாநகர சபையின் முதலாவது முதல்வரான சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் ஆகியோர் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி இரு உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளினதும் நடத்தை மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாகப் பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசேட விசாரணை ஆணைக்குழு ஒன்றை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நியமித்திருந்தார்.
குறித்த விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தீர்க்கமான விசாரணைகளின் இறுதி அறிக்கை மற்றும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகளுக்கு அமைவாகவே, இவர்கள் இருவரும் பதவிகளில் இருந்தும், உறுப்பினர் நிலைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி. கிஷோரை பதவியில் இருந்து நீக்கியிருப்பது வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம் என்றும், அது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை விமர்சித்ததற்காக மட்டுமே, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை உப தவிசாளர் பதவியிலிருந்து மட்டுமன்றி நகர சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனறும் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ந்து நடத்தப்படாமல் இருக்கும் சூழலில், எதிர்ப்புக் குரல்களை அடக்கவும் விமர்சகர்களை தண்டிக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆளுநரின் அதிகாரங்களையும் அரச அதிகாரத்தையும் பயன்படுத்தி வருவதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.