Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கைது!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கைது!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால், முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்படிருந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவை பொலிஸார் கொலை செய்வதைத் தடுப்பதற்கும், குறித்த சந்தேகநபரின் தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி காலி பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையைத் தவிர வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும், அத்துடன் விசாரணை நடவடிக்கைகளில் இருந்து அவரை விடுவிப்பதற்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்காக, கடந்த 2023ஆம் ஆண்டு டுபாயில் வைத்து சந்தேகநபரின் மனைவியான மதுஷிகா மதுவந்தி என்பவரிடம் 50 கோடி ரூபாயை இலஞ்சமாகக் கோரியுள்ளனர்.

பின்னர் அந்தத் தொகை 20 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டு, அதில் முன்பணமாக 12 கோடி ரூபாயை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டதாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித நிர்மல ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்படும் சரித் வசந்த குமார அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின், இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளராகச் செயற்பட்ட வருஷ ஹென்னதிகே அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோரே இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பகிர்க: Facebook Twitter