மொரகஹஹேன, கோரலைம பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றில் மூன்று நபர்கள் இணைந்து கொள்ளையடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
மொரகஹஹேன, கோரலைம பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கியின் வளாகத்துக்குள் இன்று (23) அதிகாலை 1.00 மணியளவில் நுழைந்த குறித்த குழுவினர் அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கட்டிவைத்துவிட்டு, வங்கியின் பின்புறம் உள்ள குளியலறையின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து, அதற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களை கைது செய்யும் பொருட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.