இணையவழி பணப் பரிமாற்ற முறைகள் மூலம் வங்கி கணக்குகளுக்குப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்கிசை மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கட்டுவ பகுதியில் வைத்து போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
கைதான நபர்களிடம் இருந்து 1 கிலோகிராம் 34 கிராம் ஹேஷ் போதைப்பொருள், 7 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 8 கிராம் 860 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 351,200 ரூபாய் பணமும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களும் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.