யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆக்க இலக்கியக் கழகம் மற்றும் மரபுரிமைக் கழகம் இணைந்து வழங்கும் நிலம் 2026 கண்காட்சி நேற்றுக் காலை ஆரம்பமானது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில்மாறன் தலைமையில், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரியும் பழைய மாணவருமான வைத்தியர் த. துஷ்யந்தன் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
நேற்றைய தினம் வேறு பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்த்திருந்தனர். இன்றையதினம் மாலை 4 மணி வரை கண்காட்சியை சென்று பார்வையிட முடியும்.
குறித்த கண்காட்சியில் கலை, பண்பாடு, கலாசார மரபுரிமைகளை எடுத்துக்காட்டும் தமிழர்களின் பாரம்பரிய மரபுரிமைப் பொருள்கள், படங்கள், பழைய நாளிதழ்கள், இந்துக்கல்லூரியின் தொன்மையை வெளிப்படுத்தும் சான்றுகள், புகைப்படங்கள், பாடசாலை சாரணர் அணியின் வரலாறு, ஆறுமுக நாவலர் வரலாற்றுக் காட்சிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆரம்ப கால மருத்துவ உபகரணங்கள், நூலக நிறுவனத்தின் எண்ணிம செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களை மாணவர் கழகத்தினர் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளதோடு வரும் பார்வையாளர்களிடம் தெளிவாக விளங்கப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.