Thursday, 23 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை- சுரேஷ் சலே!

உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை- சுரேஷ் சலே!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குனர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

குற்றப் புலனாய்வு தடுப்புக் காவலுக்கு மீண்டும் திரும்ப விரும்பவில்லை என்றும், மரண தண்டனையே மிகவும் பொருத்தமானது என்றும் சுரேஷ் சலே கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுரேஷ் சலே, அவரது தனிப்பட்ட வழக்கறிஞர் சந்திக்கச் சென்றபோது மேற்கண்டவாறு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தி வரும் விசாரணைகள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது குறித்த அரசின் நிலைப்பாடு மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் விடுத்த கோரிக்கை ஆகியவற்றை வழக்கறிஞர் சுரேஷ் சலேவிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போதைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு சுரேஷ் சலேவிடம் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த தடுப்பு கூடத்திற்குத் திரும்ப விரும்பவில்லை என்றும், அந்த இடம் ஒரு நரகம் என்றும் கூறியுள்ள சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் இயக்குனருக்குத் தன் மீது தனிப்பட்ட விரோதம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே தனது உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை எனவும் சுரேஷ் சலே வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அண்மையில் சுரேஷ் சலே பகிரங்கமாக விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் நாள் தொடர்பான காணொளிக் காட்சிகள் எதுவும் இல்லை என, குற்றவியல் புலனாய்வுத் துறை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குத் தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முந்தைய காணொளிக் காட்சிகள் மட்டுமே உள்ளதால், மார்ச் 8 ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனையின் காணொளிக் காட்சிகள் எதுவும் இல்லை என்று குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தொடர்புடைய காணொளிக் காட்சிகளைப் பெறுவதற்காக மற்றொரு தரப்பினரிடமிருந்து கணினி உதவியைப் பெறுவதில் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது.

சுரேஷ் சலே தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையிடம் இருந்து மேலும் பல அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கைகளை 26 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter