Thursday, 23 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ஏறாவூர் பகுதியில் 16 வயதுடைய சிறுவனை கடத்திச் சென்று தாக்குதல்- சந்தேகநபர் கைது!

ஏறாவூர் பகுதியில் 16 வயதுடைய சிறுவனை கடத்திச் சென்று தாக்குதல்- சந்தேகநபர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 16 வயதுடைய சிறுவனை கடத்திச் சென்று, தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சிறுவனை ஏறாவூர் பொலிஸார் நேற்று (15) கைது செய்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி, தளவாய் பிரதேசங்களில் 15 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களை உள்ளடக்கிய மூன்று வாள்வெட்டுக் குழுக்கள் இயங்கி வருகின்றன.

இந்தப் பிரதேசத்தை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரே இக்குழுக்களை வழிநடத்துவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் கோடாரிகளுடன் திரியும் இக்குழுக்களுக்கிடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருவதுடன், கடந்த நோன்புப் பெருநாள் காலத்தில் இசை நிகழ்ச்சியொன்றைப் பார்த்துத் திரும்பியவர்கள் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

குழுக்களுக்கிடையிலான மோதலின் தொடர்ச்சியாக, பழிவாங்கும் நடவடிக்கையாக ஒரு குழுவினர், மற்றைய குழுவைச் சேர்ந்த 16 வயது சிறுவனை கடத்திச் சென்று ஆள் நடமாட்டமற்ற பகுதியில் வைத்து, அவனது ஆடைகளைக் களைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அச்சிறுவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுத் திரும்பியிருந்தான். தாக்குதல் நடத்தும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் திங்கட்கிழமை (15) அன்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய மற்ற மூவர் தலைமறைவாகியுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதோடு, தலைமறைவாகியுள்ள மற்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

பகிர்க: Facebook Twitter