இலங்கை போக்குவரத்துச் சபையின் சில டிப்போக்கள் நஷ்டமடைவதற்கு, அவை பிரதேச அளவில் அமைந்திருப்பதும், அந்த வீதிகளில் அதிகளவிலான பயணிகள் பயணிக்கும் பயணவாரங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுமே காரணமாகும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இ.போ.ச. விடம் உள்ள பேருந்து இருப்பில் நிலவும் குறைபாடுகள் காரணமாக, அவற்றை நிரந்தரமாக பழுதுபார்க்க வேண்டியுள்ளதால் அதற்காக அதிக செலவு ஏற்படுவதாகவும், இதனாலேயே இ.போ.ச. விற்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோல் 2026ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி நிலவரப்படி இலங்கை போக்குவரத்துச் சபையில் காணப்பட்ட பணியாளர் வெற்றிடங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பணியமர்த்த முடிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
2026.01.31ஆம் திகதி நிலவரப்படி 1,034 சாரதிகள், 1,022 நடத்துனர்கள், 429 தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் 59 பணிமனை மேற்பார்வையாளர்கள் என வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும், நேற்று (10) அந்த வெற்றிடங்களில் ஒரு பகுதி நிரப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதன்படி தற்போது நிலவும் பணியாளர் வெற்றிடங்களாக 647 சாரதிகள், 770 நடத்துனர்கள், 429 தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் 59 பணிமனை மேற்பார்வையாளர்கள் மட்டுமே காணப்படுவதாக பிரதி அமைச்சர் விளக்கமளித்தார்.
அந்த வெற்றிடங்களுக்கும் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது நிலவும் சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், உரிய பதவிகளுக்கு உள்வாங்குவதற்கும் நேர்முகத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இதற்காக அமைச்சரவைப் பத்திரம் மூலம் அனுமதி பெற்று, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.