தூத்துக்குடி மாவட்டம் நகர உட்கோட்டம் வடக்கு பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல இலட்சம் பெறுமதியான பொருட்களை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
க்யூ பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், திரேஸ்புரம் கடற்கரையில் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது திரேஸ்புரம் கடற்கரையின் வடபுறம் உள்ள வாடையில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதிவு எண் இல்லாத இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட பைபர் படகில் ஏற்றிக் கொண்டிருந்த 42 மூட்டைகளில் இருந்த வாசனை சவர்க்காரங்கள், 11,520 செம்புகளை கடத்தல் கும்பல் பொலிஸாரை பார்த்ததும் அப்படியே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அங்கு கிடந்த இந்திய ரூபாயில் 30 லட்சம் பெறுமதியான சவர்க்காரங்கள் ,செம்புகளை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகையும் பறிமுதல் செய்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய கடத்தல் கும்பலை பொலிஸார் தேடிவருகின்றனர்.