பாதுக்கை, மாதுலாவ ஸ்ரீ சுதர்மாராம விகாரையின் பௌத்த பாடல்களை (கவி பண) பதிவு செய்யும் ஒலிப்பதிவுக்கூடம் ஒன்றை உடைத்து, அங்கிருந்த சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினிகள் உள்ளிட்ட பல ஒலிப்பதிவு உபகரணங்களைத் திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுக்கை பொலிஸார் தெரிவித்துள்ளது.
பாதுக்கை, வட்டரெக ஜயமுதுகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதுக்கை, மாதுலாவ ஸ்ரீ சுதர்மாராம விகாரையின் தேரர் ஒருவரால் பாதுக்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொருட்களைத் திருடிய பின்னர், அவற்றை ஒருவருக்கு விற்பனை செய்திருந்த நிலையிலேயே பொலிஸாரால் அவை மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் ‘ஐஸ்’ போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர் என்பதுடன், அவர் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.