நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் அல்லது அதன் சித்தாந்தங்களைப் பரப்பும் எவ்விதச் செயற்பாடுகளுக்கும் தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய (9) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த கால யுத்தத்தில் தங்களது உயிர்களை இழந்த சொந்தப் பந்தங்களையும், உறவுகளையும் நினைவுகூருவதற்கான முழுமையான மற்றும் நியாயமான உரிமை வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்குக் காணப்படுகிறது என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அண்மையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பாடலுடன் தொடர்புடையதாகக் கூறி கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞன் விவகாரம் குறித்துப் பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் சட்ட மா அதிபருடன் (AG) இன்று அவசரக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் கிளிநொச்சி இளைஞரின் கைது தொடர்பான சட்டப் பின்னணிகள் மற்றும் அதன் தீவிரத்தன்மை குறித்து உயர் அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்ட பின்னர், அந்த இளைஞர் விவகாரத்தில் மிகவும் சாதகமான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான இறுதித் தீர்மானம் ஒன்று மிக விரைவில் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.