அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த நிலையில்,நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் நேற்றுமுன்தினம் முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். உணவு, நீர் மற்றும் மருந்துகளை உட்கொள்ள மறுத்த நிலையில், அவரது உடல்நிலை மிக மோசமடைந்ததை அடுத்தே அவர் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சுரேஷ் சலே தமது உடல்நிலை குறித்து கடும் அச்சம் வெளியிட்டுள்ளதுடன், கண்களைத் தானம் செய்வதற்கும் இறுதி உயில் சாசனத்தைத் தயாரிப்பதற்கும் தேவையான ஆவணங்களை உடனடியாகக் கொண்டு வருமாறு தனது சட்டத்தரணிகளிடம் அறிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தமக்கு ஏதேனும் நேர்ந்தாலும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சுரேஷ் சலே மீது தடுப்புக் காவலில் சித்திரவதை, கொடூரமான நடத்தைகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மருத்துவ சேவை மறுப்பு போன்ற அநீதிகள் இழைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அவரது மனைவி பொலிஸ்மா அதிபருக்கு நேற்று அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கடந்த ஜூன் 6ஆம் திகதி சிறையில் நடந்த சந்திப்பின் போது தனது கணவர் பகிர்ந்துகொண்ட 10 முக்கிய விடயங்களை உள்ளடக்கி, இது குறித்து சுயாதீன குற்றவியல் விசாரணை நடத்துமாறு அவர் கோரியுள்ளார்.
கடந்த மார்ச் 7ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட முந்தைய முறைப்பாடு குறித்து பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போதைய கடிதத்தை புதிய முறைப்பாடாகக் கருதி உடனடியாகத் தலையிடுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
சுரேஷ் சலேவுக்கு நடத்தப்படும் கொடூரமான முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று காலை முதல் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை முன்னெடுக்க சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, நீதிமன்ற உத்தரவின் பேரில் தொடர்ச்சியாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.