எரிபொருள் கொள்வனவில் பாரிய ஊழல் இடம்பெறுவதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்காகவே தொடர்ச்சியான விலை உயர்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதன் சுமையை சாதாரண மக்கள் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதும் தற்போதைய விலை உயர்வுகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை ஒரு பீப்பாய் எரிபொருளை உலக சந்தை விலையை விட 47 முதல் 50 அமெரிக்க டொலர்கள் வரை கூடுதலாக செலுத்தி இறக்குமதி செய்துள்ளதாகவும், அதேவேளை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் ஒரு பீப்பாய்க்கு 18 முதல் 20 அமெரிக்க டொலர்கள் வரை மட்டுமே கூடுதலாக செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி உலக சந்தை விலையை விட அதிக விலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பது பாரிய ஊழலாகக் கருதப்பட வேண்டிய விடயமாகும் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஒரு பீப்பாய் 60 அமெரிக்க டொலர் என்ற குறைந்த விலையில் வாங்கப்பட்ட பழைய எரிபொருள் கையிருப்புகளை வைத்திருந்தபோதும், உலக சந்தை விலை உயர்வை காரணம் காட்டி உள்நாட்டு விலைகளை அதிகரித்ததாகவும், இதன் மூலம் பொதுமக்கள் சுரண்டப்பட்டு செயற்கையான இலாபம் காட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.
போதிய எரிபொருள் கையிருப்பு இருந்தபோதும், தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு, மூன்று வாரங்களுக்குள் மூன்று முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ஜூலை மாதம் முதல் எரிபொருள் மானியங்கள் நீக்கப்படும் என தெரிவித்துள்ள நிலையில், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் ஜூன் மாதத்திலிருந்தே மானியங்கள் வழங்கப்படாது என கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும், போக்குவரத்துச் செலவுகள் உயர்வதன் தாக்கமாக எரிவாயு விலைகளும் உயரக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.
ஏற்கனவே மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சார உற்பத்திச் செலவுகள் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தை காரணம் காட்டி நீர்க்கட்டணத்தையும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆனந்த பாலித்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.