துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது கெப் ரக வாகனம் மோதியதில் துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் நேற்று (22) காலை இடம்பெற்றுள்ளது.
பானகமுவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில், இந்த விபத்து திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொறக்கொட்டாஞ்சேனை – களுவன்கேணி வீதியில் நேற்று (22) காலை துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் மீது, கெப் ரக வாகனம் மோதி இந்த விபத்து நிகழ்ந்தத.
விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.
இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்தவரின் மனைவியும் பிள்ளையும் வாக்குமூலம் அளித்துள்ளதுடன், விபத்து குறித்த விசாரணையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு விபத்து என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பியோடியிருந்த 24 வயதுடைய கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கும், உயிரிழந்தவருக்கும் இடையே நிலவிய பழைய முரண்பாடு காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.