Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமை தொடர்பில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த கருத்து!

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமை தொடர்பில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த கருத்து!

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமையானது, அரசாங்கத்தின் கொள்கை அல்லது தவறான தீர்மானம் அல்ல எனவும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக உருவான உலகளாவிய நெருக்கடியின் விளைவே எனவும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றையதினம் (22) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக எரிபொருள் விலைகள், எரிவாயு மற்றும் உர விலைகள், அத்துடன் கப்பல் போக்குவரத்து மற்றும் காப்புறுதி கட்டணங்கள் வேகமாக அதிகரித்துள்ளதாகக் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் டொலர் விலையும், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் டொலர் விலையும் மாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், ஏற்றுமதி பொருட்களின் டொலர் விலையை விட இறக்குமதி பொருட்களின் டொலர் விலைகள் அதிகரித்தமை இலங்கையை பிரதானமாகப் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் உலகளாவிய ரீதியில் டொலரை ஸ்திரப்படுத்துவதற்கும் டொலருக்கு அதிக இலாபத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, டொலருக்கான தேவை அதிகரித்து, முதலீடுகள் டொலரை நோக்கி நகரும் போக்கு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக ஏனைய நாணயங்களுடன் ஒப்பிடுகையில் டொலர் வலுவடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களில் எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், அந்த விலைகளின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருட்களுக்கான கொடுப்பனவுகள் மே மாதத்தில் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அமைச்சர், மே மாதமளவில் அது 521 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் எதிர்வரும் 27ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் 2 தவணைகளின் பணத்தை ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்வதற்காக அதன் செயற்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த 2 தவணைகளும் கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

இதுதவிர ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடமிருந்தும் மேலும் பல மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter